Monday, February 8, 2016

குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. 

1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச் செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.

2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.

3. குரோம், அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions/ எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு “Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.

4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும். 

6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்து பவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் “+” அல்லது “-” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.

8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+-0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும். 

9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt-+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, “Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.

10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் “Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.

11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, “On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ““Continue where I left off.”” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்துஇணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி

Sunday, January 10, 2016

2016ல் இந்திய ஸ்மார்ட்போன் தொழில் பிரிவு


நடப்பு 2016 ஆம் ஆண்டில், இந்திய ஸ்மார்ட் போன் தொழில் பிரிவில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட உள்ளன. உலக அளவில், இணையப் பயனாளர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 50% பேர், மொபைல் போன் வழியாக மட்டுமே, இணைய இணைப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நடப்பு ஆண்டில், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில், வியக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக, இப்பிரிவில் ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகள் அறிவித்துள்ளன.

இணையப் பயன்பாட்டில் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி, ஸ்மார்ட் போன் தயாரிப்பிற்குத் துணை நிற்கும். அத்துடன், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் எண்ணிக்கையை உயர்த்தும். 4ஜி / எல்.டி.இ. தொழில் நுட்பம் தரும் ஊக்கத்தில், புரோகிராம்கள் வடிவமைக்கும் தொழில் பிரிவில், முன்னேற்றம் ஏற்படும். இந்த வளர்ச்சியை நாம் சில பிரிவுகளாகக் காணலாம்.

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட்போன் பயன்பாடு


சாதாரண வசதிகளைக் கொண்ட போன்களின் பயன்பாட்டிலிருந்து, ஸ்மார்ட் போன்களுக்கு மாறுவோரின் எண்ணிக்கை, அபரிதமான எண்ணிக்கையில் உயர இருக்கிறது. இந்த பயனாளர்கள், எப்போதும் தொடர்பில் இருப்பது எத்தகைய வசதிகளை, ஆச்சரியங்களைத் தருகிறது என்பதை வியப்புடன் அனுபவிப்பார்கள். இந்தப் பிரிவில் அடுத்த வளர்ச்சி, மாநில மொழிகளின் பயன்பாட்டில் அமையும். 
ஆங்கிலம் தவிர்த்த இந்திய மொழிகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த அப்ளிகேஷன்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் கிடைக்கும். இவை பயன்படுத்துவதில் அதிக பட்ச எளிமையினைக் கொண்டவையாக இருக்கும். ஸ்மார்ட் போன் பயன்படுத்த இருக்கும் அடுத்த 10 கோடி பேருக்கு தங்கள் மொழிப் பயன்பாட்டுடன், மற்றவருடன் தொடர்பு கொள்வதற்கான செலவும் குறைவானதாக அமையும். இது குறித்த விழிப்புணர்ச்சியும் மக்களிடையே அதிகமாகப் பரவும்.

வரி கட்டமைப்பு


வர இருக்கும் வணிக வரி அமைப்பிலான மாற்றங்கள், ஸ்மார்ட் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சீன நாட்டிலிருந்து எளிதாக இனி இந்தியாவிற்குள் போன்கள் வருவது சிரமமாக அமையும். புதிய வரி கட்டமைப்பு, இந்திய நிறுவனங்களுக்கு அவர்களின் செயல்பாட்டிற்கு உதவுவதாகவும், இந்தியா முழுமையும் தங்கள் தயாரிப்புகளைக் கொண்டு சென்று விற்பனை செய்வதில் துணை புரிவதாகவும் அமையும்.

பெரிய திரைகள்


ஸ்மார்ட் போன்களில், ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியும் பணிகளில் 80% பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இவற்றின் திரை அளவு பெரியதாக அமையும். அதன் அடிப்படையில், அனைத்துமே பெரிய அளவில் வடிவமைக்கப்படும். இது ஸ்மார்ட் போன் தொழில் பிரிவுகளுக்கு உற்சாகத்தை அளித்து, புதிய மாடல்களை வடிவமைக்க உதவும்.

4ஜி / எல்.டி.இ. பரவலாக்கம்


2015 ஆம் ஆண்டிலேயே, 4ஜி மொபைல் இணைப்பு சேவை பரவத் தொடங்கியது. 2016ல் இது வலுப்பெறும். மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பெரிய அளவிலான நிறுவனங்கள், மக்களிடையே பரவலாகத் தங்கள் சேவையைக் கொண்டு சேர்க்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 4ஜி சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எல்.டி.இ. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான புதிய உரிமங்கள், நடப்பு ஆண்டிலும் தரப்பட இருப்பதால், டிஜிட்டல் இந்தியாவினை அமைப்பதில், 4ஜி சேவை நல்ல பங்கினை அளிக்கும். இன்னும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே, 4ஜி பயனாளர்களுடன், 2ஜி மற்றும் 3ஜி பயனாளர்களும் இயங்குவார்கள்.

உள்நாட்டு தயாரிப்பு


மொபைல் போன் தயாரிப்பில், இந்திய நிறுவனங்களின் செயல்பாடு, 2016ல் முக்கிய இடத்தைக் கொண்டதாக இருக்கும். தயாரிப்பு திறன் கூடுதலாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, தயாரிப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும். உள் நாடு மற்றும் வெளிநாடு தயாரிப்புகளுக்கிடையே, நல்ல உற்சாகமான போட்டி இருக்கும். இதனால், மக்களுக்கு நல்ல போன்கள், அவர்கள் வாங்கும் விலையில் கிடைப்பது அதிகரிக்கும். இதனால், புதிய முறை வர்த்தக நிலைப்பாடுகள், ஸ்மார்ட் போன் தயாரிப்பு மற்றும் விற்பனைப் பிரிவில் ஏற்படும். மொபைல் போன் தயாரிப்பில் தேவைப்படும் துணை சாதனங்கள் தயாரிப்பு பிரிவிலும், கூடுதல் எண்ணிக்கையில் நிறுவனங்கள் தோன்றும். உலக அளவில் இத்தகைய சாதனங்களைத் தயாரித்து வழங்குபவர்கள், இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க போட்டியிடுவார்கள். ஆசிய மற்றும் பிற நாடுகளுக்கான சாதனங்களைத் தயாரிக்க, இந்தியாவை ஒரு களமாக அமைக்க திட்டமிடுவார்கள்.

மொபைல் சாதன வழி சேவை


மொபைல் வழியாக சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். 20 கோடி ஸ்மார்ட் போன் பயனாளர்களை விரைவில் இந்தியா பெறும். பட்ஜெட் விலை சாதனங்கள், குறைந்த கட்டணத்தில் சேவைகள் மற்றும் சாதனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவை என அனைத்துப் பிரிவுகளும் ஒன்றிணைந்து செயலாற்றும் காலம் உருவாகி வருகிறது. இது நடப்பு ஆண்டில் வலுப்பெறும். இதனால் பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும். இதனால், பொழுது போக்கு, பயணங்கள் மேற்கொள்வது, உடல் நலத்திற்கான திட்டங்கள் மற்றும் வங்கி பயன்பாடு ஆகிய சேவைகளை மக்களுக்குச் செம்மையாக வழங்க, நிறுவனங்களிடையே சரியான போட்டி நிலவும். இது புதிய கண்டுபிடிப்புகளையும், சுகமான வசதிகளையும் மக்களுக்குத் தரும்.

நன்றி :தினமலர் /கம்ப்யூட்டர் மலர் செய்தி