Showing posts with label Tamil Literature. Show all posts
Showing posts with label Tamil Literature. Show all posts

Tuesday, December 11, 2012

தமிழ் ஒரு கடல்!!


 


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். 


தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.


உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். 


சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். 


கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்

சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

மணிமேகலை 4,759 அடிகள்

பெருங்கதை 16,230 அடிகள்


பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

தாயுமானவர் 1,454 பாடல்கள்

அருணகிரி 1,361 பாடல்கள்

இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!



(நன்றி :சந்தானம் சுவாமிநாதன்)