எல்லோரா இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும்.
இதுஔரங்கபாத் நகரிலிருந்து 30 கிமீ (18.6 மைல்கள்) தொலைவில் உள்ளது. ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக் களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது. எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
எல்லோரா இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆக விளங்குகிறது. சரணந்திரிக் குன்றுகளின் நிலைக்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள 34 குகைகள் இங்கே உள்ளன.
இக் குகைகளிலே பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளதானது அக்காலத்தில் நிலவிய சமயப் பொறையை எடுத்துக் காட்டுவதாகக் கருதப்படுகின்றது.
இந்துக் குகைகள்
இங்குள்ள இந்துக் குகைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத் திறனையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றுட் சில மிகவும் சிக்கல் தன்மை கொண்டவையாக இருந்ததால் இவற்றைக் அமைத்து முடிப்பதற்குப் பல பரம்பரைக் காலம் எடுத்ததாகச் சொல்லப்படுகின்றது.
கைலாசநாதர் கோயில் எனப்படும் 16 ஆம் எண்ணுடைய குகையே எல்லோராவிலுள்ள அனைத்துக் குகைகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வியப்புக்குரிய அமைப்பு, சிவபெருமானின் இருப்பிடம் எனப்படும் கைலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக் குடைவரை, பல மாடிகளைக் கொண்ட கோயில் வளாகம் போல் காட்சியளிக்கிறது. ஒரு தனிப் பாறையில் குடையப்பட்டுள்ள இக் கோயில் ஏதென்ஸில் உள்ள பார்த்தினனிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும்.
பௌத்தக் குகைகள்
பௌத்தக் குகைகளே இங்கு முதலில் அமைக்கப்பட்டவையாகும். இவை ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் செதுக்கப்பட்டவை. இவற்றுள் பெரும்பாலானவை பௌத்தத் துறவிகளுக்கான மடங்கள். பல அடுக்குகளைக் கொண்ட இம்மடங்களில் துறவிகள் தங்கும் விடுதிகள், படுக்கையறைகள், சமையற்கூடங்கள் முதலான அறைகள் உள்ளன.
இக்குகைகள் சிலவற்றில் புத்தர், போதிசத்துவர் போன்றோரின் உருவங்கள் மரத்தால் செய்தாற் போன்று தோற்றமளிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.
சமணக் குகைகள்
சமணக் குகைகள் சமணத் தத்துவங்களை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மற்ற குகைகளைப் போன்று பெரிதாக இல்லாவிடினும் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சோட்டா கைலாசு, இந்திர சபா, சகன்னாத சபா ஆகிய கோவில்கள் இவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.
i proud to born from hindu and indian
ReplyDelete